சென்னை:  

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இன்று  4வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதன் காரண மாக பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியானதும், பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மீது எஸ்மா சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவைத்தொகை, வருங்கால வைப்புநிதி நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும்   உள்ளிட்ட 7 அம்சகோரிக்கையை வலியுறுத்தி தொ.மு.ச., சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்பட 13  தொழிற்சங்கங்கள்  போராட்டத்தில் குதித்துள்ளன.

போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்களுடன்  தமிழக அரசும், தொழிலாளர் ஆணையமும் பலசுற்று பேச்சுவார்த்த நடத்தியும், இரு தரப்பினருக்கும் இடையே எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

மேலும், சென்னை ஐகோர்ட்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டும் தொழிலாளர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை.

தமிழகம் முழுவதும்  இன்று 4வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்ற னர். இதன் காரணமாக அரசுக்கு ஆதரவான தொழிற்சங்கங்களும், தனியார் பஸ் டிரைவர்களை வைத்தும் பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது.

மேலும் தினசரி ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை பணிக்கு அமர்த்தியும் பஸ்களை இயக்கி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் விபத்துக்குள் ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவி வருகிறது.

தமிழக அரசின் கையாலாகததனத்தால் அரசின்  அனைத்து நிவாகமும் முடங்கி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

1 லட்சம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மேல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதாகவும், போக்குவரத்து தொழிலாளர்கள் விவகாரத்தில் இன்று மாலை கூடி முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும், நாளை நீதி மன்றத்தை நாட இருப்பதாகவும்  தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

இதற்கிடையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியானதும், பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மீது எஸ்மா சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவும் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை தமிழக சட்டசபை கூட்டத்தின் இந்த ஆண்டின் முதல் தொடர் கவர்னர் உரையுடன் தொடங்க உள்ள நிலை யில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் அரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது