சென்னை,

போக்குவரத்து தொழிலாளர் நல சங்கங்களுடன் இன்று பிற்பகல் நடைபெற இருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

பஸ் ஸ்டிரைக் காரணமாக தமிழகம் முழுவதும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது திடீரென  பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவைத்தொகை, வருங்கால வைப்புநிதி நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும்   உள்ளிட்ட 7 அம்சகோரிக்கையை வலியுறுத்தி தொ.மு.ச., சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்பட 10 தொழிற்சங்கங்கள் இன்றுமுதல் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளன.

ஏற்கனவே பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் இன்று பிற்பகல் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் ஆணையம் முயற்சி மேற்கொண்டது.

இன்று மாலை 3.30 மணி அளவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று  தொழிலாளர் நல ஆணையர் யாசின் பேகம் அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தை தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் போக்குவரத்து துறை அமைச்சரும், முதல்வர் பஸ் ஸ்டிரைக் குறித்து விவாதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.