சென்னை: தமிழகம் – கர்நாடகா இடையே வரும் 16ம் தேதிக்கு பின்னரும் பேருந்துகள் இயக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களுக்கு இடையேயான பொதுப் பேருந்துப் போக்குவரத்து சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வசிக்கும் பொதுமக்களின் வேண்டுகோளினை ஏற்று, 11.11.2020 முதல் 16.11.2020 வரை கர்நாடகாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே பொதுப்பேருந்து போக்குவரத்திற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில முதலமைச்சர், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிற்கிடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்தினை தடையின்றி தொடர்ந்து இயக்க முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேருந்துப் போக்குவரத்து சேவையை தொடர பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இக்கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பணி நிமித்தமாக பொதுமக்கள் சென்றுவர ஏதுவாகவும், 16.11.2020க்கு பின்னரும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவையை தொடர்ந்து இயக்குமாறு முதலமைச்சர் பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார்கள்.

பொதுப் பேருந்து சேவையை பயன்படுத்தும்போது, அரசு வெளியிட்டுள்ள நிலையான கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.