சென்னை

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.  இந்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால் இது சட்டமாக்கப்பட உள்ளது.  இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் கே எஸ் அழகிரி, “இந்த வருடம் நடந்த தேர்தலில், மக்களவையில் 303 உறுப்பினர்களைப் பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த பா.ஜ.க. அரசு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்புக் காட்டாமல் மதரீதியாகப் பிளவு அரசியலை நடத்துகிற முயற்சியில் ஈடுபட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தற்போது நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தம் நாடு முழுவதும் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து அறிஞர் பெருமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் களத்தில் இறங்கி, கடுமையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்தியத் தலைநகர் டில்லியில் ஜாமியா இஸ்லாமியப் பல்கலைக் கழகம், அலிகார் பல்கலைக் கழகம், இந்து பனாரஸ் பல்கலைக் கழகம், ஐ.ஐ.டி. மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக அணிதிரண்டு இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து கடுமையாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அத்துடன் சென்னை, புதுச்சேரி, ஐதராபாத், மும்பை, அகமதாபாத், லக்னோ, வாரணாசி, கொல்கத்தா, கவுகாத்தி போன்ற நகரங்களில் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு பா.ஜ.க. ஆட்சியைக் கண்டித்து நாடு முழுவதும் போராடி வருகிறார்கள்.

தற்போது மக்களவையில் பா.ஜ.க.விற்கு பெரும்பான்மை இருப்பதால் இச்சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே வேளையில் மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையிலும் மாநிலக் கட்சிகள் அச்சுறுத்தப்பட்டு, ஆதரவு பெறப்பட்டுள்ளது.  குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மாநிலங்களவையில் கிடைத்த வாக்குகள் 125, எதிர்ப்பு வாக்குகள் 105.

இதில் அ.தி.மு.க.வின் 11 வாக்குகளும் எதிர்த்து அளிக்கப்பட்டிருந்தால் சட்டத் திருத்தம் நிறைவேறி இருக்காது.  இவ்வாறு இஸ்லாமியர்களின் உரிமைகளை மறுக்கிற சட்டத் திருத்தத்தை அ.தி.மு.க. ஆதரித்திருப்பதன் மூலம் பா.ஜ.க.வின் ஆணைக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுகிற கட்சியாக மாறியிருப்பதை உறுதி செய்கிறது. அதிமுக இதைவிட இஸ்லாமியர்களுக்கு எதிரான துரோகம் வேறு எதையும் செய்து விட முடியாது.

கடந்த 1955 இல் நிறைவேற்றப்பட்ட இந்தியக் குடியுரிமைச் சட்டம், பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கியது. தற்போது 2019 இல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் மத அடிப்படையில் குடியுரிமை வழங்க முற்படுகிறது. இதை மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் கடுமையாக எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அண்ணல் மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு ஆகியோர் வடிவமைத்துக் கொடுத்த இந்திய அரசமைப்புச் சட்டத்தைச் சீர்குலைத்துச் சிதைக்கிற முயற்சியாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. இந்தியாவை மதரீதியாகச் சீர்குலைக்கிற பா.ஜ.க.வுக்கு நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவதன் வெளிப்பாடுகளே தற்போது நடைபெறுகிற எதிர்ப்பு போராட்டங்களாகும். “ எனத் தெரிவித்துள்ளார்..