டெல்லி: தமிழகத்தில் அரியலூர்,கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது.

அரியலூர் ,கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அரியலூர் ,கள்ளக்குறிச்சி பகுதிகளில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

650 கோடி ரூபாயில் மத்திய , மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் இந்த புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன. ஏற்கனவே மத்திய அரசு நாடு முழுவதும் 2020-21ம் ஆண்டில் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடிவு செய்திருந்தது.

தற்போது அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதித்து உள்ளதால் தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 11 ஆக உயருகிறது.