சென்னை : வாக்குச் சாவடிகளில் கேமரா பொருத்தும் பணி நடக்க உள்ளதால் பள்ளிகளை திறந்து வைக்க தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள ஆணையம், வாக்குச் சாவடிகளில் காமிரா பொருந்தும் பணியை தொடங்கி உள்ளது. பெரும்பாலான வாக்குச்சாவடிகள், பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்படுவதால், அங்கு காமிரா பொருத்தும் பணி மற்றும் தேர்தல் ஒத்திகை நடக்க உள்ளதால் பள்ளி வளாகங்களை திறந்து வைத்திருப்பதை உறுதி செய்ய பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளருக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்

அதன்படி வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளையும்  ஏப்ரல் 2 முதல் 5 ஆம் தேதி வரை பள்ளிகள் திறந்திருப்பதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் 88 ஆயிரத்து 936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா மூலம் கண்காணிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.