கொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு  ஏற்கனவே வெளியிட்ட பரிந்துரையை திருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
இதுநாள் வரை கொரோனா வைரஸ் காற்றினால் பரவாது என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது காற்றினாலும் பரவும் வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது..
காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை, கொரோனா வைரஸ் நோய் உள்ள ஒருவர் இருமல் மற்றும் தும்மும்போதும் பேசும்போதும் மூக்கு அல்லது வாயில் இருந்து வெளியேற்றப்படும் சிறிய நீர்த்துளிகள் மூலம் ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு முதன்மையாக பரவுகிறது என்று உலக சுகாதாரம் நிறுவனம் கூறி வருகிறது.
ஆனால்,  கொரோனா வைரஸ் காற்றின் மூலமாக பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் எனவே விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என, உலக விஞ்ஞானிகள்  குரல் எழுப்பி உள்ளனர்.
வைரஸ் காற்றில் மிதக்கும் சிறிய துகள்களின் மீது ஒட்டியிருக்கும் கொரோனா வைரஸ், அதிலிருந்து மக்களுக்கு பரவி  பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக பல நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளதாகவும்,  உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை திருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த கடிதத்தில்  32 நாடுகளைச் சேர்ந்த  239 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு இருப்பதாகவும்,  இது தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும், அடுத்த வாரம் அறிவியல் இதழில் வெளியிடப் போவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், வைரஸ் காற்றில் பறந்து பரவியதற்கான சான்றுகள் நம்பத்தகுந்ததாக இல்லை என்று சுகாதார நிறுவனம் (who)  தெரிவித்துள்ளது. மேலும், காற்றின் மூலம் பரவுமா என்பத குறித்த ஆய்வு செய்துவருவதாகவும், இதுவரை உறுதிப்படுததப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொழில்நுட்ப முன்னணி டாக்டர் பெனிடெட்டா அலெக்ரான்ஸி கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தப்பிக்க மூச்சு பயிற்சி, சுவாசப்பயிற்சி நல்ல பயனைத் தரும், அதை தொடர்ந்து  செய்து வாருங்கள் என ஒருபுறம் ஆய்வாளர்கள் குரல் எழுப்பிக்கொண்டி ருக்கும் நிலையில், மற்றொருபுறம் காற்றினாலும் வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் பீதியை கிளப்பி வருகின்றனர்-