டில்லி,

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோரை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. சட்டத்த அவர்கள் கையில் எடுப்பதையும் அனுமதிக்க முடியாது என்றும் கூறி உள்ளது.

நாட்டில் பாரதியஜனதா தலைமையிலான ஆட்சி பதவியேற்ற பிறகு, வட மாநிலங்களில் பல இடங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில், சிறுபாண்மையினரையும், மாட்டுக்கறி விற்பவர்களையும் தொல்லைபடுத்தி வருகின்றனர்.

உ.பி. மாநிலம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற  போர்வையில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இறந்த பசுக்களின் தோலை உரித்ததாக சிலலைர, பசு பாதுகாவலர்கள் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ராஜஸ்தான், ஹரியாணா, டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினரைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அரியாணா மாநிலம் பல்லப்கார்க் பகுதியில் ரயிலில் 15 வயது சிறுவன் ஜூனைத் கான் ஒரு கும்பலால் கொல்லப்பட்டான்.

அதுபோல மாட்டுக்கறி கொண்டு சென்றதாக, பசு பாதுகாவலர்களால் கடுமையான தாக்குதலுக்கு ஆளான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இஸ்லாமிய நபரை கைது செய்துள்ளது மகராஷ்டிரா காவல்துறை. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக  பசுவின் பெயரில் தலித்துகளும், முஸ்லிம்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். பசு பாதுகாவலர்களால் தொடர்ந்து தலித்துகள்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது. குஜராத்தில் மாட்டிறைச்சி அரசியல் உச்சத்துக்கு வந்துள்ளது.

அதுபோல தமிழக அரசு சார்பாக வட மாநிலங்களில் இருந்து ரெயிலில் பசுக்களை ஏற்றிக் கெண்டுவந்த தமிழக அரசு அதிகாரிகள் பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது.

இதன் காரணமாக பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நாட்டில் வன்முறை நடைபெறுவதாக பல வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,  பசுக்களை கடத்தியதாக நாட்டில் தற்போது வரை 66 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

இதற்கு 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும்,   பசு பாதுகாவலர்கள் என சட்டத்தை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது  என்றும், பசு பெயரில் நடைபெறும் வன்முறையை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யவும் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.