சென்னை: முதல்வர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும், பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமியின் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்  கே.பி.முனுசாமி கூறினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் அமைச்சர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று சென்னை ராயபுரத்தில்  அதிமுக தலைமை அலுவலகத்தில்  அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த  வி.பி துரைசாமியை  பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நிலையில், அவருக்கு மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில்,   நேற்று செய்தியாளர்களை சந்தித்த வி.பி.துரைசாமி,  இனிமேல், பாஜக திமுக இடையேதான் போட்டி என்று அதிமுகவை வெறுப்பேற்றும் வகையில் கூறினார்.
தமிழகத்தில் பாஜக இதுவரை அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றே தேர்தலை சந்தித்து, மாபெரும் தோல்விகளை சந்தித்து வரும்  நிலையில், அவரது நேற்றைய பேச்சு  தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற அதிமுக தலைவர்கள் கூட்டத்தில், 2021 சட்டமன்ற தேர்தல், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர், வி.பி.துரைசாமியின் கருத்து உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இதையடுத்து  கட்சியின் மூத்த தலைவரும், அதிமுக ணை ஒருங்கிணைப்பாளர்  கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  பாஜகவுடன் கூட்டணி என்று யார் சொன்னது, அ ந்த கட்சியின் மாநில தலைவரா? அல்லது அந்த கட்சியின் தேசிய தலைவரா என்று கேள்வி எழுப்பினார்.
நேற்று வரை ஒரு கட்சியில் இருந்தவர்,அதற்கு முன்பாக இன்னொரு கட்சியில் இருந்தவர்.ஏதோ கட்சிக்கு சென்றதும் அரசியல் ஆதாயம் தேட இவ்வாறு சொல்லி இருக்கிறார் .
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் பாஜக தேர்தலை சந்தித்தது. அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதாக அதன் தலைவர் முருகனே கூறிவிட்டார். ஆதாயம் கிடைப்ப ற்காக பாஜகவுக்கு சென்ற துரைசாமி கூறியதற்கு எல்லாம் பதில் சொல்ல அவசியமில்லை. அவருக்கு பாஜக அந்த அதிகாரத்தை கொடுத்துள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு.  சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து தற்போது ஆலோசனை நடத்தினோம். அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தலைமைக்கழகம் முறையாக ஆலோசித்து உரிய நேரத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்றார்.
சட்டசபை தேர்தலுக்கான அதிமுகவின் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை அதிமுக நிர்வாகிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.