சேலம்:

மிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில்,  தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்,  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மீண்டும் தேர்தல் பிரசாரத்திற் காக மீண்டும்  இன்று தமிழகம் வந்துள்ளார். இன்று  கிருஷ்ணகிரி, சேலம், தேனி,திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

இன்று காலை மதுரை வந்த ராகுல் அங்கிருந்து ஹெரிகாப்டர் மூலம் கிருஷ்ணகிரி வந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். இதற்காக சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ள மைதானத் தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த  மேடையில் ராகுலுடன், திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய நாடாளு மன்ற தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசினர்.

கிருஷ்ணகிரி தொகுதியில்  காங்கிரஸ் வேட்பாளராக  செல்லகுமார் போட்டியிடுகிறார்.  அங்கு அவரையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்து  ராகுல் பேசினார். அவரது பேச்சை திமுக எம்.பி.டி.கே.எஸ் இளங்கோவன் மொழி பெயர்த்து பேசினார்.

அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு பேச்சைத்தொடங்கிய ராகுல் நேரடியாக மோடியை மீதான தாக்குதலை தொடுத்தார். மோடி நாடு முழுவதும் ஒரே கொள்கை சிந்தாந்தத்தை திணிக்க முயற்சிப்பதாக  குற்றம் சாட்டினார்.

தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது

திமுக – காங்கிரஸ் கூட்டணி மக்களை நம்பி உருவானது, மக்களுக்காக உருவானது  என்று கூறியவர்,  தமிழகத்தில் அதிமுக ஆட்சியை இயக்கி கொண்டிருக்கிறார்  பிரதமர் மோடி  என்று குற்றம் சாட்டினார்.

நமது நாடு பல மாநிலங்கள், பல்வேறு கலாச்சாரங்கள், பல மொழிகள் கொண்ட நாடு இந்தியா. இதில்  தமிழர்களின் வரலாறு, கலாச்சாரம், மொழி மிகவும் முக்கியமானது. இந்தியாவில் தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை. ஆனால், பல மொழிகள், கலாச்சாரங்கள் அனைத்தும் காங்கிரசுக்கு முக்கியமானது அதனால்தான் திமுகவும், காங்கிரசும் தோழமைக் கட்சிகளுடன் கைகோர்த்து மோடியை எதிர்க்கின்றன.

தமிழர்களின் வரலாற்றைப் படித்துப் பார்த்தால், தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை மோடி புரிந்துகொள்வார். ஆனால், தற்போது  அதிமுக அரசை கட்டுப்படுத்த முடியும் என்பதால், அதன் மூலம் தமிழக மக்களையும் கட்டுப்படுத்த முடியும் என மோடி நினைக்கிறார் தமிழர்களின் வரலாறு, பண்பாட்டை நான் புரிந்து வைத்துள்ளேன் என்று கூறினார்.

பண மதிப்பிழப்பு குறித்து யாரிடமும் மோடி ஆலோசிக்கவில்லை. கேட்டிருந்தால் 12 வயது குழந்தை கூட, இது தவறான திட்டம் என கூறியிருக்கும். ஆனால், கோடிக்கணக்கான மக்களின் கருத்துகளை கேட்டறிந்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம்.

காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து தமிழகத்தில் வறுமையை ஒழிப்போம். ஆயிரக்கணக்கான கோடிகளை அம்பானி, அதானிகளுக்கு மோடி கொடுத்தார். நாங்கள் ஏழைகளுக்கு பணத்தை கொடுக்கப்போகிறோம்.

எளிமையான ஒரே வரி

பிரதமர் மோடி 15 நபர்களுக்காக மட்டுமே கடந்த 5 ஆண்டுகளாக மோடி ஆட்சி நடத்தி வருகிறார்,  அனில் அம்பானி, நிரவ் மோடி, மெகுல்சோக்சி போன்றவர்களுக்காக ஆட்சி நடத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டியவர்,  ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் சென்று சேர்ந்தி ருக்க வேண்டிய பணம் 15 பேருக்கு  மட்டுமே சென்றுள்ளது என்று கடுமையாக விமர்சித்தார்.

மோடி ஆட்சியின்போது,  பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ற பெயரால் மக்கள் பணத்தை மோடி தட்டிப் பறித்துள்ளார் என்று குற்றம்சாட்டிய ராகுல்,  கப்பார் சிங் வரியால் (ஜிஎஸ்டி) தொழிற்துறை சீர்குலைந்துள்ளது, 5 வகையான வரிகள், நெசுவுக்கு வரிகள், 28 சதவிகித வரிகள் போன்ற வற்றால்,  தமிழகத்தின் தொழில் நகரான திருப்பூரின் தொழிற்துறை ஜிஎஸ்டியால் நசிந்துள்ளது, அதுபோல பட்டுக்கு பேர் போன  காஞ்சி பட்டுத்தொழில் ஜிஎஸ்டியால் நசிந்துள்ளது தொழிற்துறை சீரழிவால் லட்சக் கணக்கானோர் வேலை இழந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஒரே வரி, அது எளிமையான வரி, அதை காங்கிரஸ் செயல்படுத்தும் என்றும் கூறினார்.

வறுமை மீதான சர்ஜிக்கல் ஸ்டிரைக்

ஆட்சிக்கு வரும்போது, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என கூறிய  மோடி.. அது பொய் என்பது தற்போது நிரூபணமாகி விட்டது என்றும், ஆனால், நாங்கள் நாட்டில் உள்ள 20 சதவீத ஏழைகளுக்கு வங்கிக் கணக்கில் எவ்வளவு உதவித் தொகை செலுத்த முடியும் என ஆய்வு செய்தோம், நாட்டின்  பொருளாதாரத்திற்கு பாதிப்பில்லாமல், ஏழைகளுக்கு எவ்வளவு உதவித் தொகை உண்மையாகவே கொடுக்க முடியும் என பரிசீலித்தோம் அதைத்தொடர்ந்தே  மக்களின் வறுமையின் மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவது என முடிவு செய்தோம் என்று கூறியவர், அதன் பயனாகவே,  ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 தர முடியும் என முடிவு செய்தோம் என்றார்.

நிபாய் திட்டம் மூலம் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72000

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள 20 சதவீத ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கப்படும் இது நிச்சயம் என்று கூறிய ராகுல்,  சாதி, மத, இன, மொழி வேறுபாடுகள் ஏதுமின்றி, ஏழைகளுக்கு ரூ.72,000 உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும்,  அரசின் உதவித் தொகை மூலம் ஏழைகள் தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள் என்றார். ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கும் நியாய் திட்டத்தின் கீழ், பணம் குடும்பத்தில் உள்ள பெண் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்

மத்தியில் காங்கிரஸ் பொறுப்பேற்றதும்,  பொருள்கள் வாங்கு வது அதிகரிக்கும், அதற்கேற்ப உற்பத்தி பெருகும், பொருளாதாரமும் வளம் பெறும் என்று கூறிய ராகுல்,  பஞ்சாயத்துகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படும், விவசாயிகள் பெரும் துன்பத்தை எதிர்கொண்டு வருகின்றனர், தமிழகத்தில் கஜா புயலால் காவிரி பாசன மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.. ஆனால்,  விவசாயிகளின் துயர் குறித்து தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுக அரசு கவலைப்படவில்லை என்று குற்றம் சாட்டியவர்,  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் துயர் துடைக்கப்படும் என்றும் நாங்கள்  விவசாயிகள் பக்கம் அரசு நிற்பது உறுதிசெய்யப்படும் என்றும் கூறினார்.

இதுபோன்ற ஒரு திட்டத்தை உலகத்தில் எந்தவொரு நாடும் செயல்படுத்தவில்லை என்று கூறியவர், இந்த பணம் குடும்பத்தில் உள்ள பெண்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.

மேலும் பாஜக ஆட்சி பதவியேற்றதும்,  ரயில்வே துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதை  நிறுத்திவிட்டது, ஆனால்  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும்,  வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்வோம் என்றும்,  குறைந்த பட்ச ஆதார விலை, வேளாண் விளைபொருள் விலை, ஊக்கத் தொகை ஆகியவை அறிவிக்கப்படும் என்றார்.

நாட்டின் பணத்தை பணக்காரர்களுக்கு வாரி வழங்கிய மோடி

நாட்டின் ரூ.35,000 கோடி பணத்தை பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கும்,   நிரவ் மோடிக்கும், மெகுல் சோக்சிக்கும், மல்லையாவுக்கும் வாரி வழங்கிவிட்டதாக குற்றம் சாட்டிய ராகுல்,  பல்லாயிரம் கோடி கடன் வாங்கியவர்கள் சிறையில் இல்லை…

ஆனால் ஏழை விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்தவில்லை எனில் சிறை செல்கிறார்கள்.. ஏழை விவசாயிகள் சிறை செல்வதை தடுக்கும் வகையிலேயே  நாங்கள் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளோம் கடனை திருப்பிச் செலுத்தாதற்காக விவசாயிகள் சிறை செல்லும் நிலைக்கு முடிவு கட்டப்படும் விவசாயிகளின் இதயங்களில் உள்ள அச்சம் அகற்றப்படும். தற்போதைய ஆட்சியில்  ஏழை விவசாயிகள் வங்கிகடன் பெற்று கட்டவில்லையென்றால் சிறை செல்லும் நிலை.. ஆனால்,  காங். ஆட்சியில் அதுபோன்ற நிலை ஏற்படாது.

பெண்களுக்கு 33 சதவிகித ஒதுக்கீடு

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றவர்,  மத்திய அரசு பதவிகளிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றார்.

மேக் இன் இந்தியா என்ற பெயரில் வெற்று அறிவிப்பை மெடடுமே செய்து வந்தார். ஆனால்,எங்கு நோக்கிலும் மேக் இன் சைனா என்றரே உள்ளது. உங்களது கைப்பேசி, சைனா  உடமைகளை காணப்படுகிறது. அனைதும் மேக் இன் சைனா என்று உள்ளது. மோடி மக்களை ஏமாற்றி வருகிறார்.

இளைஞர்கள் தொழில் தொடங்க சலுகை

இன்றைய நிலையில், மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஒருவர் தொழில் தொடங்க முயற்சித்தால், பல்வேறு அலுவலகங்களை நாட வேண்டியது உள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளதுபோல, புதிதாக தொடங்க  தொடங்கி விரும்புபவர்கள்  3 ஆண்டுகளுக்கு எந்தவித அனுமதி தேவையில்லை. என்றும், 3 ஆண்டுகளுக்கு பிறகு தாங்கள் அனுமதி பெற்றால் போதுமானது.

22 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் 

நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் 22 லடசம்  காலி பணியிடங்கள் உள்ளது. அதை நிரப்ப மோடி அரசு தவறி விட்டது. அது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விரைவில் நிரப்பப்படும். மேலும் 10 லட்சம்புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் இங்கேகூடியிருப்பது தமிழர்களின் பண்பாடு, பழக்கவழக்கம் போன்ற வற்றை பாதுகாக்க கூடியிருக்கிறோம்.  அதிகார பரவலை  விரும்புகிறோம். மேடையில் உள்ள ஒத்த கட்சிகள் இணைந்துள்ளன.  இந்தியா  மாநிலங்களில் இருந்தும், மாநகரங்கள், கிராமங்களில் இருந்து நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறோம். இந்தியா பிரதமர் அலுவலகத்திலிருந்து நடத்தப்பட வேண்டும் என நினைக்கவில்லை. நாக்பூரிலிருந்து தமிழகம் வழிநடத்தப்பட கூடாது என விரும்புகிறோம். தமிழக மக்களை நாக்பூரில் உள்ளவர்கள் ஆள்வதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற ராகுல், தமிழகத்தை தமிழர்களே ஆளப் போகிறார்கள், விரைவில் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராகப் போகிறார். என்றும்,  எங்கள் குடும்பத்தின் மீது தமிழக மக்கள் வைத்துள்ள அன்புக்கு நன்றி அதே அன்பை நானும் தமிழக மக்கள் மீது வைத்துள்ளேன்.

இவ்வாறு ராகுல்  பேசினார்.