உங்கள் வீட்டுக்கு வந்தால் தோசை சுட்டுத் தருவீர்களா என்று தமிழக பெண்ணிடம் பிரதமர் மோடி ஜாலியாக கேட்டார்.

ஏழை மக்களுக்காக மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பயனாளிகளுடன் இன்று நமோ ஆப் மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ருத்தராம்மா என்ற பெண்ணுடன் மோடிபேசினார். மோடி இந்தியில் பேச, ருத்தராம்மா தமிழிலில் பேசினர். இருவரின் வசதிக்காக  வசதியாக மொழிபெயர்ப்பாளர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்.

முன்னதாக வணக்கம் ருத்தராம்மா என்று பிரதமர் மோடி தமிழில் பேசினார். பிறகு இந்தியில் பேசிய அவர், உங்கள் வீட்டில் எரிவாயு இணைப்பு எப்படி உள்ளது என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ருத்தராம்மா, நன்றாக உள்ளது. முன்பேல்லாம் விறகு அடுப்பில் கரும்புகையில் கிடந்து அல்லல் பட வேண்டியிருக்கும்.  தற்போது அந்த சிரமம் இல்லை என்றும் கூறினார். இதைக்கேட்ட மோடி, தனது தாயும் முன்பு விறகு அடுப்பில் புகைமூட்டத்தில் சிரமப்பட்டார் என்றார்.

தொடர்ந்து ருத்தராம்மாவிடம் பேசிய மோடி, உங்கள் வீட்டுக்கு வந்தால் தோசை சுட்டுத் தருவீர்களா என்று கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த ருத்ராமா, கண்டிப்பாக தோசை சுட்டுத் தருவேன் என்று கூறினார்.