சென்னை: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களின்  குற்றப்பின்னணி வேட்பாளர்கள் குறித்த விவரங்களை செய்திதாள்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என  தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.  பல்வேறு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே2ந்தேதி நடைபெறுகிறது.  தேரதல் அறிவிக்கப்பட்டுள்ளதால், 5 மாநிலங்களிலும்  தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு முக்கிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளில் 3 முறை  வெளியிடுவதை தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக, உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதையும் உறுதி செய்யுமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை விளம்பரப்படுத்துதல் குறித்து அக்டோபர் 2018 மற்றும் மார்ச் 2020-இல் வெளியிடப்பட்ட விரிவான விதிமுறைகளை தொடர்ந்து இப்போது நடைபெற இருக்கும் 5 மாநிலத் தேர்தலிலும் இது அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.