டில்லி:

பழைய ரூபாய் நோட்டுக்களை மீண்டும் வங்கிகளில் செலுத்த அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றுமத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, பொதுமக்கள் இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டிசம்ப 30ம் தேதி வரை செலுத்தி மாற்றிக் கொண்டனர்.

மார்ச் 31ம் தேதி வரை ரிசர்வ் வங்கிகளில்மாற்றிக் கொள்ளவும், அதன் பின் இந்த ரூபாய் நோட்டுக்களை வைத்திருக்கக் கூடாது. மீறி வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், சுதா மிஷ்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவித்த காலக்கெடுவுக்குள் என்னிடம் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை திருப்பி செலுத்த முடியவில்லை. எனவே என்னிடம் உள்ள நோட்டுக்களை வங்கியில் செலுத்த விரும்புகிறேன். அதற்கான வழிமுறைகளை தெரிவிக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இதேபோல் வேறு சிலரும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், நேர்மையான காரணங்களுக்காக பணத்தை மாற்ற முடியாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கலாமே? என்று கேள்வி எழுப்பியது. இத்றகு 2 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.

இன்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தைம மத்திய அரசு தாக்கல் செய்தது. இதில் பழைய ரூபாய் நோட்டுக்களை மீண்டும் வங்கிகளில் செலுத்த அனுமதிக்க முடியாது. மீண்டும் செலுத்த அனுமதி கொடுத்தால், கருப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கமே தோல்வி அடையும்” என்று தெரிவித்துள்ளது. இதனால் பழைய ரூபாய்களை வங்கியில் செலுத்த மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பியிருந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.