சென்னை

சென்னை ரெட்ஹில்சில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தில் கார் விபத்துக்குள்ளாகியது

ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள கொளத்தூரில் வசிப்பவர் பழனி (வயது 65) இவர் தனது மனைவி நவநீதம் (வயது 55) மகள் பவித்ரா (வயது 26) மற்றும் பவித்ராவின் கணவர் ஐயப்பன் ஆகியோருடன் மீஞ்சூரில் ஒரு உறவினர் வீட்டு நிச்சயதார்த்தத்துக்கு சென்றுள்ளனர். விழா முடிந்து நேற்று இரவு அவர்கள் அனைவரும் ஒர் இன்னோவா வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.  வாகனத்தை ஓட்டுனர் கந்தவேல் செலுத்திக் கொண்டிருந்துள்ளார்.

ரெட்ஹில்சில் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு முழுமையடையாமல் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  அங்கே தடுப்புகள் ஏதும் அமைக்கப்படாததால் இரவில் இந்த வாகனம் மேம்பாலத்தில் மேல் ஏறிச் சென்றுள்ளது.  மேம்பால முடிவில் முழுவதும் முடிக்கப்படாததால் பாலத்தில் இருந்து 30 அடி கீழே உள்ள பள்ளத்தில் வாகனம் விழுந்துள்ளது.  ஓட்டுனர் கந்தவேல் மற்றும் ஐயப்பன் ஆகிய இருவரும் காரில் இருந்து குதித்து தப்பி விட்டனர். மற்ற மூவரும் அங்கேயே மரணம் அடைந்துள்ளனர்.

சோழவரம் போலீசார் இது குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.