மதுரை: பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் பொதிகை தொலைக்காட்சியில் தினசரி 15 நிமிடம் சமஸ்கிருத செய்தி வாசிப்பு அறிக்கை இடம்பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு தமிழை நசுக்கும் முயற்சி என்று தமிழகத்தில் பலத்த கண்டனங்கள் எழுந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பிற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: மனுதாரருக்கு தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு சேனலை மாற்றிக் கொள்ளலாம்.

இதை விடவும் முக்கியமான விஷயங்கள் நாட்டில் எத்தனையோ உள்ளது என்று கூறி வழக்கினை முடித்து வைப்பதாக உத்தரவிட்டது.