நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்கப் போலி கொரோனா சான்றிதழ் அளித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு..

உத்தரப்பிரதேச மாநிலம் மெந்தவா சட்டப்பேரவை தொகுதியில் இருந்து பா.ஜ.க. சார்பில் தேர்வு செய்யபட்டவர், ராகேஷ் சிங் பாகல்.

இவர் மீது சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள  கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் ஆஜராகாமல் நான்கு ஆண்டுகளாக ‘டிமிக்கி’’ கொடுத்து வந்த எம்.எல்.ஏ. ராகேஷுக்கு அண்மையில் மற்றொரு சம்மன் அனுப்பப்பட்டது .

நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்க அவர் கொரோனாவை ’’பகடைக் காயாக’’ பயன்படுத்திக் கொண்டார்.

தனக்கு கொரோனா தொற்று உள்ளதாக அங்குள்ள தனியார் பரிசோதனை கூடத்தில் போலி சான்றிதழ் பெற்று அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

ஆனால் எம்.எல்.ஏ..ராகேஷ், கொடுத்தது போலி சான்றிதழ் என தெரிய வந்ததால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தர விட்டது.

இதையடுத்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ,ராகேஷ் மீது கலீலாபாத் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தப்பிக்க பா.ஜ.க. எம்.எல்.ஏ. பொய்யாக கொரோனா ’’சர்டிபிகேட்’’ அளித்துள்ள சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-பா.பாரதி.