நியூஜெர்சி

மெரிக்காவில் நியூஜெர்சி நகரில் இந்துக் கோலில் கட்டும் இந்தியத் தொழிலாளர்கள் மீது பல விதி மீறல்கள் நடப்பதாக வழக்கு பதியப்பட்டுள்ளது,.

அமெரிக்காவில் பல இந்துக் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.  தற்போது நியூஜெர்சியில் ஒரு புதிய கோவில் கட்டப்பட்டு வருகிறது.  இந்த கோவில் கட்டுமான பொறுப்பை பொச்சன்வாசி ஸ்ரீ அக்‌ஷர் புருஷோத்தம் சுவாமிநாரயண் சன்ஸ்தா என்னும் இந்து அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.  இந்த அமைப்பு சுருக்கமாக பாப்ஸ் என அழைக்கப்படுகிறது.

இங்குப் பணி புரிய இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை இந்த அமைப்பு பணி அமர்த்தி அமெரிக்காவுக்கு அழைத்து வந்துள்ளது.  இங்கு குறைந்த ஊதியமாக மாதத்துக்கு $450 அல்லது மணிக்கு $1.20 எனப் பணி புரிய அமைப்பு வலியுறுத்தி உள்ளது  நியூஜெர்சியில் குறைந்த பட்ச ஊதியமாக மணிக்கு $12 டாலர் என அரசு நிர்ணயம் செய்துள்ளது.  மேலும் அவர்கள் ஒரு வாரத்தில் 40 மணி நேரத்துக்கு மேல் பணி செய்தால் மேலும் அரை மணி ஊதியம் அதிகப்படியாக அளிக்க வேண்டும்.

இதையொட்டி இங்குப் பணி புரியும் ஊழியர்களில் 5 பேர் இணைந்து அமைப்பின் மீது அமெரிக்க நெவார்க் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குப் பதிந்துள்ளனர்.   இந்த வழக்கு மனுவில் தாங்கள் தொடர்ந்து கடுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாருடன் பேசினால் தங்களுக்கு ஊதிய வெட்டு, கைது, இந்தியாவுக்குத் திரும்ப அனுப்புதல் போன்ற மிரட்டல்கள் விடப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாப்ஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர், ”இந்த அமைப்பு ஒரு ஆன்மீக மற்றும் சமூக சேவை செய்யும் இந்து மத அமைப்பாகும்.  இதுவரை எங்கள் பணியில் யாரும் எவ்வித குறையும் சொல்லவில்லை.   இந்த குற்றச்சாட்டை இன்று (அதாவது நேற்று) காலைதான் கேள்விப்பட்டோம்.   இது குறித்து நாங்கள் தீவிரமாக செயல்பட்டு இந்த குறைகளை நீக்கத் திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.