சென்னை: தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 1600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, 23 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், காவல்துறை அனுமதி தர மறுத்த நிலையில், தடையை மீறி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினர். இந் நிலையில் தடையை மீறி  போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 1,600 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, காங்கிரஸ் தங்கபாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் முத்தரசன், விசிக தலைவா் திருமாவளவன், கூட்டணிக் கட்சித் தலைவா்கள், கனிமொழி, தயாநிதி மாறன் உள்பட கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.