சென்னை: ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

2017ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி சட்டசபையில் குட்கா கொண்டு வந்ததாக திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்எல்ஏக்களுக்கு பேரவை உரிமைக்குழு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக  கூறி அதை ரத்து செய்தது.

இதையடுத்து 2வது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் விசாரணை நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு விசாரணைக்கு வந்த போது, குட்கா பொருட்கள் விற்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்ட  தான் சட்டசபைக்கு குட்கா கொண்டு சென்றதாக ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.

இந் நிலையில், இடைக்கால தடையை நீக்கக்கோரி பேரவை செயலாளர், உரிமைக்குழு சார்பில் தாக்கல் செய்த மனுவின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை நாளை  வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.