சென்னை: தமிழகத்தில், கல்வி, வேலைவாய்பில் 3ம் பாலினத்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி  தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதி மன்றம், இது தொடர்பாக  தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

திருநங்கையான கிரேஸ்பானு கணேசன்  என்பவர் சென்னை உயர்நீதிமன்றதில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், மத்திய அரசுக்கு எதிராக நல்ஷா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால்,  தமிழகத்தில் இதுவரை, 3வது பாலினத்தவர்களுக்கு எந்தவொரு  தனி இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு இரண்டு சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வின் இன்று விசாரணைக்கு வந்தது. இதற்கு  தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், மூன்றாம் பாலினத்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து, இடஒதுக்கீடு வழங்கப்படும் என கூறியுள்ளது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  மூன்றாம் பாலினத்தவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால், அவருக்கு பல சலுகைகள் மறுக்கப்படுவதாகவும், திருநங்கைகள் நலவாரியத்தில் அரசுத்துறையினர் மட்டுமே இடம் பெற்றுள்ளதாகவும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை  என கூறப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக வரும் அக்டோபர் 29-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.