நாகப்பட்டினம்:

ச்சநீதி மன்ற தீர்ப்புப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, நாளை நாகை யில் கடலில் மூழ்கி தற்கொலை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக  விவசாயிகள் அறிவித்து உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. மாற்றாந்தாய் மனப்போக்குடனேயே செயல்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாமல் இழுத்தடித்து வருகிறது.

மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபாலன் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, நாளை நாகையில் கடலில் இறங்கி தற்கொலை செய்துகொள்ளும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார்.

அவர் மேலும்  அவர் கூறியதாவது, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கும் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. கடந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சி காரணமாக  பயிர்கள் கருகியதால் விவசாயிகள் பலர் மன உளைச்சல் காரணமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் கடந்த 2016-2017-ம் ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. ஆனால், அதிலும் ரூ.160 கோடிக்கு மேல் தமிழக அரசு பாக்கி வைத்துள்ளது என்று வேதனை யுடன் தெரிவித்தார். இந்நிலையில்,  2017-2018-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசு உடனே டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால், குளங்கள் தூர்வார வேண்டும் என்றும், இன்னும் பல இடங்களில் தூர்வாரப்படாமல் இருப்பது  அரசின் மெத்தன போக்கை காட்டுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும்,  காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்தும் நாளை (செவ்வாய்க்கிழமை) நாகையில் கடலில் மூழ்கி தற்கொலை செய்யும் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.

நாளை காலை நாகப்பட்டினத்தில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1000த்துக்கும்  மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று நாகை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து, அங்கிருந்து ஊர்வலமாக  நாகை கடலுக்கு சென்று கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகளின் தற்கொலை போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. கடற்கரை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.