சென்னை: இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழ்த் திரையுலகினர் சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பான தங்களது தீர்மானத்தை வழங்கினர்.

காவிரி மேலாண்ம வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.  அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள், மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினர்  இதுகுறித்து தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள்.

இதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்த் திரையுலகினர் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அறவழிப் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நடிகர்கள் நாசர், விஷால், ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட தமிழ்த் திரையுலகினர் சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக வலியுறுத்தினர். மேலும் இந்த சந்திப்பில், காவிரி விவகாரம் தொடர்பான தீர்மான நகலையும் ஆளுநரிடம் அளித்தனர்.