சென்னை,

மிழக விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது.

இதில் காவிரி வழக்கை மீண்டும் விசாரிக்க வகைச் செய்யும் அவசரச் சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி விவாதிக்கப்பட இருக்கிறது.

இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது,

காவிரி பிரச்னை தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்த வழக்கை விசாரித்து காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், மத்திய அரசு உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக, இந்த வழக்கை மீண்டும் விசாரித்து நான்கரை ஆண்டுகளுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்ற அவசரச் சட்டத்தை மத்திய நீர்ப் பாசனத் துறை அமைச்சர் உமாபாரதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.

இது கண்டிக்கத்தக்கது இதனால் காவிரியில் தமிழக உரிமை முற்றிலும் பறிக்கப்படுவதுடன், காவிரி டெல்டா பகுதி மக்கள் அகதிகளாக வெளியேற வேண்டிய பேராபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் விரோதமானது. மேலும் அண்டை மாநிலங்களுடனான நல்லுறவுகளைச் சீர்குலைக்கும் வகையில் உள்ள இந்த அவசரச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இதை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்திருக்கிறோம். அவர்களுடன் கலந்தாலோசித்து மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.