சென்னை,
காவிரி பிரச்னையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
பிரதான கட்சிகளான அதிமுக, பாமக, பாஜக போன்ற கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளன.
காவிரி பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
stalin
காவிரி நதி நீர் பிரச்னையில் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 10 தினங்களுக்கு முன் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து விவசாயிகள் சங்க தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அங்கு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அரசு அதற்கான முயற்சி எடுக்காததால், திமுக பொருளாளரும், எதிக்கட்சி தலைவருமான ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்ததார்.
அதையடுத்து இன்று அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
இன்று  காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் அனைத்து கட்சி தலைவர்கள், அனைத்து விவசாய சங்க தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தை திமுக சார்பில் ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார்.
அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக, தமாகா, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்து ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
அவரது அழைப்பை ஏற்று காங்கிரஸ், த.மா.கா, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளன.
மக்கள் நலக்கூட்டணி கலந்துகொள்ளாது என்று வைகோ அறிவித்தார். இதனால் மக்கள் நலக்கூட்டணி தலைவர் களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய பிரிவு மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் விவசாய பிரிவினர் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று நடைபெறும் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துகட்சி கூட்டத்தி காவிரி பிரச்சினை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும், அனைத்துக்கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் டில்லி சென்று பிரதமரை சந்திக்க முயற்சி எடுக்கப்படும் என தெரிகிறது.
இந்த கூட்டத்தால் எந்த பயனும் இல்லை என்று பா.ஜ. அறிவித்து உள்ளது. அதனால் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என்று தமிழிசை அறிவித்து உள்ளார்.
அதுபோல் பா.ம.க தலைவர் ராமதாஸ் இதுகுறித்து கூறி உள்ளதாவது: திமுக-காவிரி உரிமையை இவர்களே தாரைவார்ப்பார்களாம். உரிமைக்காக இவர்களே போராடுவார்களாம். நல்ல நாடகம்! என கூறியுள்ளார்.
இதன் காரணமாக பாமகவும் இன்று கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ஆளும்கட்சியான அதிமுகவும் அனைத்துக்கட்சி கூட்டம் தேவையற்றது என கருத்து தெரிவித்து உள்ளது.