டில்லி:

காவிரி வரைவு திட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் என்றே அந்த அமைப்புக்கு பெயர் சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

காவிரி தொடர்பாக கடந்த 12ந்தேதி உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற  விசாரணையின்போது, மத்திய அரசு  காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்தது. அதுகுறித்து பதில் தெரிவிக்க மாநில அரசுகளுக்கு  உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி நேற்றைய விசாரணையின்போது மாநில அரசுகள் சார்பாக கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. தமிழக அரசு சார்பில்   மத்திய அரசு உருவாக்கும் அமைப்பிற்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயரிட வேண்டும் என்றும், அந்த  அமைப்பின் தலைமையிடத்தை பெங்களூரில் இருந்து டில்லிக்கு  மாற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தது. மேலும், இதுகுறித்து  உடனடியாக அரசிதழில் வெளியிட்டு அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்தது.

இதுகுறித்த விசாரணையின்போது, காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயரிட மத்திய அரசு சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் காவிரி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது காவிரி வரைவு திட்டம் தொடர்பான அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை வாரியம் என்று பெயரிட கர்நாடகா சார்பில் கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் என்றே பெயரிடப்பட வேண்டும் என்றும், இதுகுறித்து  மத்தியஅரசு கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கோரி உள்ளது.

மேலும் தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட 4 கோரிக்கைகளில் 2 மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. காவிரி தொடர்பான ஆணையத்தை டில்லிக்கு மாற்றவும், மையத்தின் ஆலேசனைப்படி செயல்படுவதாகவும் தெரிவித்து உள்ளது. அதே வேளையில்,  காவிரி மேலாண்மை வாரியம் பெயரும், ஆணையத்தின் தலைவராக உச்சநீதி மன்ற நீதிபதியை நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு நிராகரித்து உள்ளது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது,  காவிரி வழக்கில் மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு திட்டம்  தாக்கல் செய்யப்பட்டது. அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில்  தங்களது தீர்ப்பை ஒத்துப் போகிறதா என்பதுகுறித்து ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி கூறினார்.

அதையடுத்து காவிரி விவகாரத்தில் நாளை மாலை 4 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.