சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள  காவிரி மீட்பு நடைபயணம் இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது.

இன்றைய நடைபயணம் தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது. தஞ்சை பகுதியில் இன்று காலை முதலே மழை  பெய்து வருகிறது. இந்த மழையில் நனைந்தபடி தனது பயணத்தை மேற்கொண்டுள்ள ஸ்டாலின்,  தஞ்சை மாவட்ட அம்மாபேட்டை புத்தூரில் கொட்டும் மழையில் பொதுமக்களிடைய உரையாற்றினார்.

அப்போது, தனது  காவிரி மீட்பு பயணத்திற்கு மழையையும் பொருட்படுத்தாமல்  ஆதரவு அளிப்பவர்களுக்கு நன்றி என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி உச்சநீதி மன்றம் தெளிவாக கூறியும்,  மத்திய அரசு விளக்கம் கேட்கிறது என குற்றம் சாட்டினார்.

இன்றைய போராட்டத்தின்போது, ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்,  டி. ஆர்.பாலு, விவசாய சங்கத்தினர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

ஏற்கனவே  கடந்த ஏப்ரல் 7ம் தேதி பிற்பகலில் திருச்சி முக்கொம்பில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். நேற்று 2வது நாளாக  தஞ்சாவூர் சூரக்கோட்டையில் இருந்து  மீண்டும் பயணத்தை தொடங்கினார். இந்நிலையில் இன்று 3வது நாளாக தஞ்சை,  அம்மாபேட்டை புத்தூரில் இருந்த தனது நடை பயணத்தை தொடங்கி உள்ளார்.

இந்த நடை பயணம்,  திருக்கருக்காவூர், அம்மாபேட்டை வரை என பிற்பகல் வரை நடைபெற உள்ளது. பிற்பகலுக்குப் பிறகு கும்பகோணம் வழியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இன்றைய நடைபயணமானது முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலினின் காவிரி மீட்பு நடைபயணத்தை ஒட்டி, ரோட்டின் இரு பக்கமும் ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் திரண்டு நின்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.