டில்லி,

காவிரி பிரச்சினை தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசுக்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய அமர்வு, இவை அனைத்திற்கும் சட்ட ரீதியிலான விளக்கம் தேவை என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை கடந்த 11–ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித் வராய், ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல்கள் பாலி நாரிமன், எஸ்.எஸ்.ஜாவளி, மோகன் கர்த்தார்க்கி, ஷியாம் திவான் ஆகியோர் வாதாடினர்.

8 நாட்கள் தொடர்ந்து கர்நாடகா வாதாடியதை தொடர்ந்த கேரள சார்பாக இரண்டு நாட்கள் வாதாடப்பட்டது.

அதையடுத்து நேற்று முதல் தமிழகம் தனது தரப்பு வாதத்தை முன்வைத்து வாதாடி வருகிறது. நேற்றைய விசாரணையின்போது,   காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின்  எந்த உத்தரவையும் கர்நாடக அரசு பின்பற்றுவது கிடையாது என்றும்,  காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ள தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை எனில், தமிழகம் அழியும் அபாயம் உள்ளதாக,  தமிழக அரசு முறையிட்டது.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது மத்திய அரசு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்துவிட்டது குறித்து பேசினார்.

பலமுறை உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும், கர்நாடகஅரசு தமிழகத்திற்கு  தண்ணீர் திறக்கவில்லை என்றும்,  காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தொடர்ந்து  கர்நாடக அரசுக்கு ஆதரவாகவும், தமிழகத்துக்கு எதிராகவுமே செயல்பட்டது என்றும், சுப்ரீம் கோர்ட்டில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக்கொண்ட மததிய அரசு, பின்னர் பின் வாங்கியது ஏன் என்றும் தமிழக அரசு கேள்வி எழுப்பியது.

அதைத்தொடர்ந்து, உச்சநீதி மன்ற அமர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியது ஏன் என்று உச்ச நீதி மன்றம் கேள்வி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.

 

இதற்கான உரிய விளக்கங்கள் மத்திய அரசு தந்தே ஆக வேண்டும் என்றும்,  இந்த வழக்கில் மத்திய அரசின் வாதத்தின்போது சட்டரீதியிலான விளக்கம் தேவை என்றும்  மத்திய அரசுக்கு நீதிபதிகள் கிடுக்கிப்பிடி போட்டுள்ளனர்.

ஏற்கனவே காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில் நீதிபதி தீபக் மிஸ்ரா , காவிரி மேலண்மை வாரியத்தை மத்திய அரசு  அமைத்தேதீர வேண்டும் என்று தீர்ப்பு கூறியிருந்த நிலையில், தற்போதைய அமர்வின் கேள்வி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவிரி வழக்கு  விசாரணை 15 நாட்கள் நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், விசாரணை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.