டில்லி:

சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதிகள் அமர்வில் இருந்து நீதிபதி  என்.வி. ரமணாவும் விலகி உள்ளார்.

ஏற்கனவே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சிக்ரி விலகியுள்ள நிலை யில், தற்போது ரமணாவும் விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை, பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி அடங்கிய உயர்மட்ட தேர்வுக் குழு நீக்கம் செய்ததை அடுத்து, அவர் தீயணைப்பு துறைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அந்தப் பதவியை ஏற்காமல் அலோக்வர்மா ராஜினாமா செய்தார்.

இடைக்கால சிபிஐ இயக்குனராக கூடுதல் இயக்குனர் பொறுப்பு வகித்த நாகேஷ்வரராவ் மீண்டும் பணியமர்த்தப்பட்டார்.

இந்த நடவடிக்கைக்கு எதிராக அரசு சாரா நிறுவனம் ஒன்று, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், தற்போது நீதிபதி என்.வி.ரமணாவும் விசாரிக்க மறுத்து விலகி உள்ளார்.

ஏற்கனவே இந்த வழக்கில் இருந்து, தலைமை ரஞ்சன் கோகாய், தான் சிபிஐ இயக்குனர் தேர்வு குழுவில் இடம்பெற்றிருப்பதால், இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது என விலகிய நிலையில், மூத்த நீதிபதி சிக்ரியும் விலகினார். அதைத்தொடர்ந்து தற்போது  நீதிபதி என்.வி.ரமணாவும் வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்து விலகி உள்ளார்.