சென்னை:

குட்கா முறைகேடு வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதி மன்றம் இன்று உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திடீரென சந்தித்து பேசினார். இது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குட்கா ஊழல் வழக்கில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உள்பட பலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதி மன்றம், குட்கா முறைகேடு வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி இன்று உத்தரவிட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை டி.ஜி.பி ராஜேந்திரன்  தலைமை செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.  அதைத்தொடர்ந்து, தமிழக  தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன,, உள்துறைச் செயலாளர் ஆகியோரையும் அவர் சந்தித்தார்.

இந்த திடீர் சந்திப்பு காரணமாக கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது.