டில்லி

ந்திய விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் சோதனை நடத்திய சிபிஐ அந்த ஆணையத்தின் அதிகாரிகளை லஞ்சப் புகாரில் கைது செய்துள்ளது.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகம் டில்லியில் உள்ள லோதி சாலையில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடப்பட்டது.

விசாரணையின் முதல் கட்டமாக டில்லியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆயினும் சிபிஐ அது குறித்து எந்த தகவலும் அளிக்காமல் விசாரணையை தொடர்ந்து வருகிறது.

இந்த சோதனையின் போது இந்திய விளையாட்டு ஆணைய இயக்குனர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதை தவிர ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆணையத்தின் போக்குவரத்து துறை வேலைகளுக்காக லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கின்றன.