டில்லி:

த்திய இடைநிலை கல்வி வாரியம் மூலம் நடத்தப்படும் சிபிஎஸ்இ 12வது வகுப்பு பொதுத்தேர்வு இன்று நாடு முழுவதும் தொடங்குகிறது.

நாடு முழுவதும் இன்னும் ஓரிருமாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு வசதிகயாக பள்ளித்தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் சிபிஎஸ்இ +2 தேர்வு இன்று தொடங்குகிறது.

பிப்ரவரி 15ந்தேதி (இன்று)  தொடங்கும் இந்த தேர்வு மார்ச் 4ந்தேதி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும்  21,400 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 13 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு  எழுதவுள்ளனர்.

தேர்வுக்காக 5ஆயிரம் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும், வினாத்தாள் திருத்துதல், தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள்,  பறக்கும் படையினர்,  மேற்பார்வையாளர்கள் உட்பட 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தபடுவதாகவும் சிபிஎஸ்இ தெரிவித்து உள்ளது.

மேலும், வினாத்தாள் கசிவு (முன்கூட்டியே வெளியாதல்)  போன்ற பிரச்னைகளைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேர்வு குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு  தேர்வு முடிவுகளை வழக்கத்தைவிட ஒருவாரம் முன்னதாகவே வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.