சென்னை: தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என தே.மு.தி.க. தொண்டர் களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் பிறந்த நாள் நாளை (ஆகஸ்டு 25) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடியுங்கள் என தனது கட்சி தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதுகாப்பு கருதி, கழக தொண்டர்களும், பொதுமக்களும் அவரவர்கள் இருக்கும் இடத்திலேயே பிறந்தநாளை கொண்டாட வேண்டும் .ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளை “வறுமை ஒழிப்புதினமாக கடைப்பிடித்து வருகிறேன். தற்போது கொரோனா கால கட்டம் என்பதால் இந்த  முறை சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் விஜயகாந்த் கிராமப்புற சுகாதார திட்டத்தை, வறுமை ஒழிப்பு தினத்தில் கடைபிடிக்க வேண்டும்.

மக்களின் முதுகெலும்பான கிராமத்தில் இருந்து இத்திட்டம் தொடங்கப்படும். ஒரு ஒன்றியத்தில் முன்மாதிரியாக ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து கிராமங்களை தூய்மைப்படுத்த வேண்டும். சோடியம், ஹைப்போ குளோரைட் அல்லது பிளீச்சிங் பவுடரை நீரில் கலந்து கிராம தெருக்களில், ஸ்பிரேயர் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்க வேண்டும்.  இத்திட்டத்தின் கீழ் கிராமங்கள் தோறும் கபகர குடிநீர் முகக்கவசம், கையுறை, சோப்புகள், சானிடைசர் கொசு மருந்து தெளிப்பது மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள், காய்கறி உள்ளிட்ட நிவாரண உதவி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா பென்சில் போன்றவற்றை வழங்க வேண்டும்.

ஆதரவற்றவர்களுக்கு தேவையான துணிமணிகள் வழங்குவது, ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் இல்லங்களுக்கு உணவளிப்பது ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குவது, குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றுவது விபத்தை தவிர்க்கும் வகையில் வேகத்தடைக்கு கலா பெயிண்ட் அடிப்பது மற்றும் கொரோனா மருத்துவ உபகரணங்களை வழங்குவது போன்ற பணிகளையும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களை பாராட்டுவது ஆகிய திட்டங்களையும், கிராமப்புற சுகாதார திட்டத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும்.

மேலும் ஏழைத் தாய்மார்கள் சுயதொழில் செய்வதற்காக தையல் இயந்திரங்களும், ஏழை சகோதரிகளின் திருமணத்திற்கு உதவிகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களும், காது கேட்கும் கருவிகள் சலவைத் தொழிலாளர்களுக்கு நலிவுற்ற ஏழை கலைஞர்கள் எளிய புகைப்படக் சலவை பெட்டிகளும், விவசாயிகள் மற்றும் குடும்பங்களுக்கு தேவையான உதவிகள், நாடகக் கலைஞர்கள் மற்றும் கிராமப்புற தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து காசோலை வழங்குதல், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல், இலவச கணினி பயிற்சி  மையம் அமைத்தல் உள்ளிட்ட பல திட்டங்களை பல ஆண்டுகளாக கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

அதேபோல், இந்த ஆண்டும் கொரோனா இருக்கும் காலகட்டத்தில் தனது பிறந்தநாளன்று வறுமை ஒழிப்பு தினமாக இந்த திட்டங்களை செயல்படுத்துங்கள். மேலும், எம்.ஜி.ஆர் காது  கேளாதோர் பள்ளிக்கு இந்தாண்டும் 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். மக்களுக்கான மக்கள் பணி என்றும் தொடரும் தமிழன் என்று சொல்லடா தலை நிவந்து நில்லடா “நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்”.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.