srilan
யாழ்ப்பாணம்:
லங்கை வடக்கு கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்கள், கர்நாடக தமிழருக்காக குரல் கொடுத்துள்ளனர்.
தாயக தமிழர்கள் மீது கைவைத்ததால் ஈழத்து தமிழனுக்கு வலிக்கிறது என்று கூறி உள்ளனர்.
இலங்கை வடக்கு மாகாண தலை நகரான யாழ்ப்பாணத்தில் ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் கூடி, கர்நாடகாவில் தமிழ்மக்களுக்கு எதிராகநடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கவலையும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மூலம், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
இலங்கையில் உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழரசுக்கட்சி, ஈபிஆர்எல்எப், டெலோ, ப்ளாட் மற்றும் தமிழ்தேசிய மக்கள்முன்னணி, தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள கடிதம்  இந்தியத் துணைத்தூதர் நடராஜனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், காவிரி பிரச்சினையால் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக,  கர்நாடகாவில் வசிக்கும்  தமிழ்மக்களைப் பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அதபோல் தமிழகத்தில் உள்ள கர்நாடகாவைச் சேர்ந்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இலங்கைத் தமிழ்மக்கள் சார்பில் கோரியிருக்கின்றன.
மேலும், கர்நாடகாவில் உள்ள பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், அங்கு மேலும் வன்முறைகள் நடைபெறாத வண்ணம் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வடமாகாண தமிழ்மக்கள் சார்பில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்.
வன்முறைகளின் துயரங்களை நேரடியாக அனுபவித்துள்ள வடமாகாண தமிழ்மக்கள் கர்நாடகாவில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் உணர்வுகளை நன்குபுரிந்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்குத் தமது அனுதாபத்தையும் ஆறுதலையும் வெளியிட்டிருக்கின்றனர் எனஅந்தக் கடிதத்தில் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கர்நாடகாவில் உள்ள தமிழ்மக்களைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக முதல்வருக்கும் தமிழகத்தில் உள்ள கர்நாடக மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என்று தமிழக முதல்வருக்கும் வடமாகாண முதலமைச்சர் கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளார்.