காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில் விமான நிலையங்களில் டிஜிட்டல் முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு அலுவலகங்கள் மற்றும் பல பகுதிகளில் காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில் அனைத்து செயல்பாடுகளும் டிஜிட்டல் முறையில் மாற்றமடைய தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில் விமான நிலையங்களிலும் போர்டிங் பாஸ் மற்றும் விமான டிக்கெட் போன்றவற்றை டிஜிட்டல் முறையிலேயே பெறவும், பரிசோதனை செய்யவும் மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஒரு சில விமான நிலையங்களில் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்த பிறகு, அனைத்து விமான நிலையங்களிலும் இது அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

2021ம் ஆண்டு அனைத்து விமான நிலையங்களிலும் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த டிஜிட்டல் முறையானது, நுழைவு வாயில்களில் உள்ள கேமரா அமைப்புகள் மூலம் பயணிகளின் முகத்தை ஸ்கேன் செய்து அனுமதி வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் போர்டிங் பாஸ்களுக்காக மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும், நேரமும் மிச்சம் ஆகும் என்றும் கூறப்படுகிறது.