டெல்லி: புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை முதல் வரும் 31ம் தேதி வரை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறி உள்ளது.

நாட்டில் தேசிய கல்விக் கொள்கையானது அண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதன்மூலமாக இப்போது பயன்பாட்டில் இருக்கக்கூடிய கல்வி முறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

இந்த கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் நாளை முதல் வரும் 31ம் தேதி வரை கருத்துகளை தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

http//innovativeindia.mygov.in/nep2020 என்ற இணையதளத்தில் சென்றும் கருத்துகளை பதிவிடலாம். இதுபற்றி அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.