சென்னை: மத்தியஅரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ்,  தமிழகத்தில் 1152 வீடுகள் கட்ட பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் மோடி பதவிஏற்றப் பிறகு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா  என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின்கீழ் 2023க்குள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் என்று திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி பல்வேறு மாநிலங்களில் புதியதொழில்நுட்பத்தின்படி வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, இன்று  தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் புதிய தொழில்நுட்பத்தில் வீடு கட்டும் திட்டத்துக்கு  இன்று காலை 11 மணிக்கு அளவில் பிரதமர்  காணொளி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார். அத்துடன்  குறைந்த விலையிலான நீடித்த வீட்டு வசதிக்கான ஆஷா இந்தியா திட்டத்தின் வெற்றியாளர்களையும் பிரதமர் அறிவிக்க உள்ளார். பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தை (நகர்புறம்) சிறப்பாகச் செயல் செயல்படுத்தியதற்கான வருடாந்திர விருதுகளையும் வழங்குகிறார்.

இநத திட்டத்தின்கீழ், தமிழகத்தில் கட்டப்படும் மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை 1, 152 .  இதன் மொத்த மதிப்பீடு ரூ.116 கோடியே 26 லட்சம் ஆகும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.63 கோடியே 36 லட்சம் ஆகும். மாநில அரசின் பங்கு ரூ.35 கோடியே 62 லட்சம் ஆகும். பயனாளிகளின் பங்கீடு ரூ.17 கோடியே 28 லட்சம் ஆகும்.

விரைவான, பாதுகாப்பான, உறுதிவாய்ந்த கட்டுமான தொழில்நுட்பத்தில் பிரி-காட்ஸ், முன்பு உருவாக்கப்பட்ட கான்கிரீட் தூண்கள் மற்றும் உத்திரங்களை கொண்டு குறுகிய காலத்தில் இத்திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த  அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.