டில்லி

மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை அளிக்க மத்திய அரசு ரூ.1.10 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகம் செய்த போது மாநிலங்களின் இழக்கும் வருவாயை ஈடுகட்ட 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு உறுதி அளித்தது.   கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாய் மிகவும் குறைந்தது  ஊரடங்கால்  மாநிலங்களுக்கு ரூ.2.35 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்த இழப்பில் ஜி எஸ் டியால் ரூ.97000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.   இதில் ரூ.97000 கோடியை ரிசர்வ் வங்கியில் இருந்து கடனாகவும் ரூ.2.35 லட்சம் கோடிக்குக் கடன் பத்திரம் வெளியிட்டும் மாநில அரசுகள் திரட்டிக் கொள்ளலாம் என மத்திய அரசு  அறிவித்தது.  மாநிலங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

நேற்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய ஜி எஸ் டி நிலுவைத் தொகைக்காக ரூ.1.10 கோடி கடன வாங்க உள்ளது.  இது மாநிலங்களுக்குத் திருப்பி தர வேண்டிய வகையில் இழப்பீடு தொகைக்குப் பதிலாகக் கடனாக வழங்கப்பட உள்ளது.

இந்த தொகையில் அசல் மற்றும் வட்டி தொகைகளை இழப்பீட்டுத் தொகையில் இருந்து கழிக்கப்பட உள்ளது.  இதனால் மத்திய அரசின் நடப்பு ஆண்டு பற்றாக்குறை அதிகரிக்காது.  அத்துடன் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு இணைந்து வாங்கும் கடன் தொகைகள் உயராது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.