கான்பூர்

டில்லியில் இருந்து காசி செல்லும் வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனைத்து பயணிகளுக்கும் கெட்டுப் போன உணவு அளிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் இருந்து காசிக்கு செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மணிக்கு 180 கிமீ வேகமாக செல்லக்கூடியதாகும். இந்த ரெயிலில் பயணிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. இந்த உணவை ஐஆர்சிடிசி என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் வழங்குகிறது. பயணச்சீட்டில் உணவுக்கும் சேர்ந்து பணம் வசூலிக்கப்படுகிறது.

கடந்த வாரம் இந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு அளிக்கப்பட்ட உணவு கெட்டுப் போய் இருந்தது. அன்று இந்த ரெயிலில் பயணம் செய்த மத்திய இணை அமைச்சரான சாத்வி நிரஞ்சன் ஜோதி க்கும் இதே உணவு வழங்கப்பட்டுள்ளது. அதே ரெயிலில் பயணம் செய்த ராணுவ அதிகாரி ஒருவர் இது குறித்து கடந்த 9 ஆம் தேதி அன்று ஐஆர்சிடிசி இடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் ஐஆர்சிடிசி விசாரணை நடத்துகின்றனர். இந்த விசாரணையின் முதல் கட்டத்தில் கான்பூரில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் இந்த கெட்டுப்போன உணவை வழங்கி உள்ளது கண்டறியப்பட்டது. அதிக வெயில் காரணமாக உணவு கெட்டுப்போனதாக ஓட்டல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்த விசாரணை தொடர்கிறது.