டில்லி

நாட்டில் ஆங்காங்கே நடைபெறும் ஓரிரண்டு பலாத்கர வழக்கைக் கண்டு மக்கள்  பீதி அடைய வேண்டம் என மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்குவார் கூறி உள்ளார்.

காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் எட்டு வயது சிறுமி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.  உத்திரப் பிரதேசம் உன்னாவ் பகுதியில் 16 வயதுப் பெண் ஒருவரை சட்டமன்ற உறுப்பினர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.    இது நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.    சிறுமிகளை பலாத்காரம் செய்யும்  குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் ஒரு செய்தியாளர் சந்திப்பில், “இவ்வளவு பெரிய நாட்டில் ஓரிரண்டு பலாத்கார சம்பவங்கள் நிகழ்வது சகஜமே.  இது குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம்.    இது போன்ற நிகழ்வுகள் துரதிருஷ்ட வசமானவைகளே.    ஆனால் அதை தடுக்க இயலாது.   அரசு இனி முன் ஜாக்கிரதையுடன் இருக்கும்.   இந்த நிகழ்வுகளில் தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

அத்துடன் தற்போது 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு  மரண தண்டனை அளிக்க உதவும் அவசரச் சட்டத்துகு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.   அதை நான் வரவேற்கிறேன்.   இதன் மூலம் சமுதாயத்தில் இத்தகைய குற்றங்கள் குறையும் என நான் நம்புகிறேன்”  என தெரிவித்துள்ளார்.