டெல்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 9வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏற்கெனவே நடைபெற்ற 8 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த சமரச முடிவும் எட்டப்பட வில்லை. இந் நிலையில், இன்று 9ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கிய பேச்சுவார்த்தையில் விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளும், மத்திய அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  விஞ்ஞான் பவனில் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 19ம் தேதி 10ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.