புதுடெல்லி:
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பல்வேறு திரைமறைவு உத்திகளைக் கையாண்டு வருகிறது பா.ஜ.க. இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராகச் செயல்படுவதை விட்டு, அரசுகளைக் கவிழ்ப்பதில் அக்கறை காட்டி வருகிறது பா.ஜ.க என காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள கே.சி.வேணுகோபால், “கொரோனா பெருந்தொற்றினால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஆயிரக்கணக்கில் பலியாகின்றனர். ஆனால் ஆளும் பா.ஜ.க அதுபற்றியெல்லாம் கவலையின்றி, ஜனநாயக ரீதியாக தேர்வு செய்த அரசுகளைக் கலைப்பதையே முன்னுரிமையாகக் கொண்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கொரோனாவுக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், அம்மக்களுக்கு சேவை செய்ய விடாமல் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்கிறது பா.ஜ.க.

முதலில் கர்நாடகா, பிறகு மத்திய பிரதேசம் தற்போது ராஜஸ்தான் மாநிலம் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்ப்பதில் காட்டும் தீவிரத்தை பா.ஜ.க கொரோனா ஒழிப்பில் காட்டினால் நல்லது.

ஏழைகளுக்கு நிவாரணமாகக் கொடுக்க மத்திய பா.ஜ.க அரசிடம் பணம் இல்லை. கொரோனாவுக்கு எதிராகப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தரமான உபகரணங்களை வழங்கவும் பணம் இல்லை. ஆனால் ஜனநாயக ரீதியாக தேர்வு செய்த ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க-விடம் ஏராளமாக பணம் உள்ளது. இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.