பாட்னா: சட்டப்பூர்வமாக கடமை இல்லையென்றாலும்கூட, ஜிஎஸ்டி விஷயத்தில் கடன் வாங்கியாவது மாநிலங்களுக்கான இழப்பீட்டை மத்திய அரசு வழங்க வ‍ேண்டுமென்று கூறியுள்ளார் பீகார் துணை முதல்வரும், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான சுஷில் குமார் மோடி.

இந்தக் கடமை சட்டப்பூர்வமானது இல்லையென்றாலும்கூட, நெறிமுறைப்படி இதை செய்ய வேண்டும் என்றுள்ளார் சுஷில்குமார் மோடி. நாளை(ஆகஸ்ட் 27) ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடவுள்ள சமயத்தில் இவ்வாறு கூறியுள்ளார் நிதித்துறை பொறுப்பை வகிக்கும் சுஷில்குமார்.

“தற்போதைய நிலையில் மாநில நிதிநிலை கடும் நெருக்கடியில் உள்ளது. தற்போதைய நிலையில், மாநில அரசால் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மட்டுமே வழங்க முடிகிறது. எங்களின் 76% வருவாய் மத்தியிலிருந்தே வருவதால், நிதியாதாரத்திற்கு பெரும்பாலும் மத்திய அரசையே நம்ப வ‍ேண்டியுள்ளது.

மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீட்டைப் பெற வேண்டியுள்ளது. ஜிஎஸ்டி கூட்டத்தில் இப்பிரச்சினைகளை எழுப்புவோம்” என்றார் அவர்.