‘சக்ரா’ திரைப்படத்தை ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செப்டம்பர் 30-ம் தேதி வரை நிறுத்திவைக்க வேண்டும் என விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதே நிலை தொடரும் என மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

விஷாலின் ‘ஆக்‌ஷன்’ படம் நஷ்டம் ஏற்பட்டால் ரூ.8.29 கோடியைத் திருப்பித் தருவதாகக் கூறிஇருந்த நிலையில் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்தாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே இயக்குநர் ஆனந்தன் என்பவர் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திடம் ஒரு கதையைச் சொல்லி அதைப் படமாக்க ஒப்பந்தமும் செய்துள்ளார். தற்போது தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குநர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து ‘சக்ரா’ என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டுமெனவும், 8.29 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டுமெனவும் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

அந்த மனுவில், ஏற்கெனவே செய்த ஒப்பந்தப்படி, விஷால் தர வேண்டிய 8.3 கோடி ரூபாய் பணத்துக்கான உத்தரவாதம் வழங்கும்படி விஷாலுக்கு உத்தரவிடவும் கோரியிருந்தனர். இதேபோல் தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை வைத்து வேறு நபருக்கு படமெடுக்க ஆனந்தனுக்குத் தடை விதிக்கவும், உத்தரவாதத் தொகையாக 1 கோடி ரூபாயைச் செலுத்த உத்தரவிட வேண்டுமெனவும் மற்றொரு வழக்கும் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் குறித்து செப்டம்பர் 24-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, நடிகர் விஷாலுக்கும், இயக்குநர் ஆனந்தனுக்கும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி என்.சதீஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார். அதுவரை, ‘சக்ரா’ திரைப்படத்தை விற்பனை செய்யும் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வேண்டும் என ஸ்டேட்டஸ் கோ உத்தரவும் பிறப்பித்துள்ளார்.