சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில்  அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில்,   வளிமண்டல சுழற்சி காரணமாக  அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் குறிப்பிட்ட 5 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கல் போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று பலமாக வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் அதிகபட்சமாக வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடியில் உள்ள கடம்பூர் பகுதியில் அதிகபட்சமாக 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது, விழுப்புரம் மாவட்டத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது, சிவகங்கை, கோவை போன்ற பகுதிகளில் குறைந்தபட்சமாக 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.