குண்டூர்
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தனது பிறந்த நாளான ஏப்ரல் 20 ஆம் தேதி அன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடு பலமுறை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதை மத்திய அரசு ஏற்காததால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதைத் தொடர்ந்து நடந்த அமளிகளால் பாராளுமன்றத் தொடர் முடங்கிப் போனது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உட்பட பல பாஜகவினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்நிலையில் குண்டூர் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடந்தது. அதில் கலந்துக் கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “அம்பேத்காரும் என் டி ராமராவும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக போராடியவர்கள். இவர்கள் வழியில் நானும் செயல்பட்டு வருகிறேன், ஏழ்மை என்னும் சொல் இருக்கவே கூடாது என்பது தான் என் வாழ்நாளின் நோக்கம் ஆகும்.
வரும் 20 ஆன் தேதி எனது பிறந்த நாள் வருகிறது. நான் எனது பிறந்த நாளைக் கொண்டாடப் போவதில்லை. அதற்கு பதிலாக ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி அன்று உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன். எங்களுக்கு குஜராத் போன்ற சிறப்பான தலைநகர் தேவை இல்லை. ஆந்திராவுக்கு சட்டப்படி தர வேண்டிய சிறப்பு அந்தஸ்தை தந்தாலே போதும்” என தெரிவித்துள்ளார்.