சென்னை:

த்திய அரசு நடத்தி வரும் யுபிஎஸ்சி (UPSC) தேர்வு முறைகளில் மத்திய அரசு புகுத்தவுள்ள புதிய முறை அநீதியானது,  சமூக நீதிக்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை பொறுத்துக் கொள்ள முடியாதவை என்றும்,  தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

யுபிஎஸ்சி (UPSC)  தேர்வுகளில் சமூகநீதியை சீர்குலைக்கும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது! பவுன்டேஷன் கோர்ஸ் மூலம் பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட,பழங்குடியின இளைஞர்களின் கனவுகளை தகர்க்கும் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கு இதுவரை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பிரிலிமினரி, மெயின் தேர்வுகளை நடத்தியும், நேர்முகத்தேர்வை நடத்தியும் தேர்வு செய்து முடிவுகளை வெளியிட்டது.

அதில், மிகச்சிறந்த மதிப்பெண்கள் வாங்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமுதாயங்களை சார்ந்த இளைஞர்கள் ஏன் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற முடியாமல் போகிறது என்பதில் உள்ள சூழ்ச்சிகள் என்னவென்று அறிந்து கொள்ள முடியாமல், இளைஞர் சமுதாயம் ஆதங்கத்தில் இருக்கிறது.

யுபிஎஸ்சி  தேர்வுகளில் சமூகநீதியை சீர்குலைக்கும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

பவுன்டேஷன் கோர்ஸ் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட,பழங்குடியின இளைஞர்களின் கனவுகளை தகர்க்கும் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

இப்போது சிவில் சர்வீஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இளைஞர்களை ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு அகில இந்திய பணிகளுக்கு நியமிக்கும் முறையையும்,  அவர்கள் பணியாற்றும் மாநில ஒதுக்கீடுகளையும் ரத்து செய்து விட்டு, முசோரியில் நூறு நாள் பயிற்சியில் இருக்கும்போது எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் எந்தப் பணிக்கு ஒருவரை தேர்வு செய்வது என்பதையும், எந்த மாநிலத்தில் பணியாற்ற அவருக்கு ஒதுக்கீடு வழங்குவது என்பதையும் முடிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் விரும்புகிறது என மத்திய பணியாளர் சீர்திருத்தத்துறையின் இணைச் செயலாளர் விஜய்குமார் சிங் அறிவித்திருப்பது, அரசியல் சட்டம் அளித்துள்ள சமூகநீதியை தட்டிப் பறிக்கும் செயல் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று நாட்டின் நிர்வாகத்தில் தங்களது பங்களிப்பை செலுத்தி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. அரசும், பிரதமர் அலுவலகமும் இப்படியொரு அநீதியான பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வுமுறையை புகுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.

ஆகவே, பவுண்டேஷன் கோர்ஸ் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்களின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் கனவுகளை தகர்க்கும் பிரதமர் அலுவலகத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும், ஏற்கனவே இத்தனை ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் சிவில் சர்வீஸ் தேர்வு அடிப்படையிலேயே அகில இந்திய பணிகளுக்கு தேர்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறேன்.

தவறினால் சமூகநீதி கொள்கையை சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து இளைஞர்களை பெருமளவில் திரட்டி மாபெரும் போராட்டத்தை தி.மு.க. நடத்திடும் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.