சென்னை: நீட் பாடத் திட்டம் இந்திய மருத்துவக் கவுன்சிலால் முடிவு செய்யப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளதால், நீட் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

12ம் வகுப்பை நிறைவுசெய்யும் மாணாக்கர்கள், எம்பிபிஎஸ் – பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளிலும், இந்திய மருத்துவ முறையான ஆயுஷ் மருத்துவப் படிப்புகளிலும் சேர, நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப்பெற வேண்டும். நடப்புக் கல்வி ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 3ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தேர்வு மே 3ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால் மே மாத இறுதியில் தேர்வு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கான பாட திட்டம் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதுதொடர்பாக, நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீட் தேர்வு குறித்த பாடத் திட்டத்தை தேசிய தேர்வுகள் முகமை மேற்கொள்ளாது.

இந்திய மருத்துவக் கவுன்சிலான எம்சிஐ மட்டுமே முடிவு செய்யும். தற்போதைய நிலையில், ஏற்கனவே அறிவித்த பாட திட்டத்திலேயே தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.