டில்லி:

குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்தால் விரும்பிய (ஆண்/ பெண்) குழந்தையை விரும்பியபடி பெற்றுக்கொள்ளலாம் என்று ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்து வருகிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்  துணை அமைப்பு  கர்ப்பவிக்யான் அனுசந்தான் கேந்திரா. இதன் முக்கிய அலுவலகம் குஜராத் மாநிலம், ஜாம்நகரில் அமைந்துள்ளது,

இந்த அமைப்பு, கர்ப்பிணிகளுக்கு ஆலோசனைகள் வழங்கிவருகிறது.

தற்போது, இந்த அமைப்பு, மந்திரங்கள் அடங்கிய, 10 சிடிக்கள் மற்றும் புத்தகங்களை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து, இந்த அமைப்பின் மேலாளர், ரேகா கவுர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

“தங்கள் குழந்தை எப்படி இருக்க வேண்டும், அதன் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்ற கனவு பெற்றோர்களுக்கு இருக்கும். கர்ப்பக் காலத்தின் போது, குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும்; குழந்தை எப்படி இருக்க வேண்டும் என, பெற்றோர் நினைக்கின்றனரோ, அதற்கேற்ப பலன் கிடைக்கும்.

நம் புராணங்களில், இதற்கு தீர்வு அளிக்கும் பல மந்திரங்கள்  இருக்கின்றன. அந்த மந்திரங்களை, கர்ப்பக் காலத்தில் படித்து வந்தாலே, விரும்பியபடி குழந்தைகள் பிறக்கும்.

தவிர எங்களிடம்  கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் உள்ளனர். இந்த மந்திரங்கள் குறித்த பயிற்சி பெற்ற அவர்கள், கர்ப்பிணிகளுக்கு தேவையான மந்திரங்களை பரிந்துரைப்பார்கள். அதன்படி நடந்தால் ஆணோ பெண்ணோ விரும்பிய குழந்தையை பெறலாம்” என்றார்.