சென்னை: 1 கோடி 34 லட்சம் புதிய ரூபாய் பறிமுதல்
சென்னை.
சென்னை  விமான நிலையம் அருகே 1 கோடியே 34 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டு கட்டுக்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன.
விமான நிலையம் நோக்கி ஒரு காரில் பணம் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, புலனாய்வு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று, போலீசார் நிறுத்தச் சொல்லி கை காட்டியும் நிற்காமல் சென்றது.
அதைத்தொடர்ந்து ஜிஎஸ்டி சாலையில் சென்ற அந்த காரை அதிகாரிகள் விரட்டிச்சென்று மடக்கினர்.
காரை சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். காருக்குள் கட்டுக்கட்டாக புதிய ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த காரில் வந்த  ரிஷ்வான், முக்தர், சமிஅகமது உள்பட 5 பேரை கைது செய்தனர்.
காரில்  1 கோடியே 34 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுக்கள் இருந்தது. பணம் கொண்டு செல்லப்பட்ட காரையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் பணம் எங்கு செல்கிறது என்பது குறித்து அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், புதிய ரூபாய் நோட்டுகளை தாம்பரத்தில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரை சந்தித்து கொடுப்ப தற்காக 5 பேரும்  காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இந்த ரூபாய் நோட்டுகளை வாங்கி கொண்டு அதற்கு பதிலாக ரூ.2 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டு களை தருவதாக அந்த பிரமுகர் கூறி இருந்ததும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார், எப்படி இவ்வளவு புதிய ரூபாய் நோட்டு கட்டுகள் கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.