சென்னை

சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் இறுதி ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.   இதனால் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இயங்கவில்லை.   தமிழகத்தில் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு தேர்வைத் தவிர மற்ற மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது.

இறுதி ஆண்டு தேர்வையும் ரத்து செய்யக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் இறுதி ஆண்டு தேர்வு வரும் செப்டம்பர் 24 அன்று தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.   ஏற்கனவே ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆன்லைன் தேர்வுகள் விடைகளைத் தேர்வு செய்து எழுதக்கூடிய வகையில் ஒரு மதிப்பெண் வினாக்களுடன் நடைபெற உள்ளன.   ஒவ்வொரு தேர்வுகளிலும் 40 வினாக்கள் இருக்கும்.   அதில் 30 வினாக்களுக்கு மட்டும் விடை அளித்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்டவணைப்படி வரும் செப்டம்பர் 19 முதல் 21 ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன.   அதன் பிறகு செப்டம்பர் 21 முதல் 29 வரை இறுதி செமஸ்டர் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.